சென்னை, பொங்கல் விழாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், வனவிலங்குகளை பாதுகாத்தல் மற்றும் அன்னிய களைச் செடிகளை அழித்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வனத்துறை சார்பில், 'யானைப் பொங்கல் விழா' நடத்தப்படுகிறது.
இதில், தாவரங்களால் உருவாக்கப்பட்ட யானைகள் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து வைத்து பார்வையிட்டார்.
தமிழக வனப்பரப்பை அதிகரிப்பதுடன், வன விலங்குகள் பாதுகாப்பு, அன்னிய களைத் தாவரங்களை அழிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வனத்துறை சார்பாக, பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், யானைப் பொங்கல் விழா நடக்கிறது. இதில், யானைகளின் அணிவகுப்பு கண்காட்சி, 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் பார்வைக்காக கிண்டி தேசிய சிறுவர் பூங்கா மற்றும் சென்னை வன உயிரின மண்டலம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், வனத்துறை கூடுதல் தலைமைச்செயலர் சுப்ரியா சாஹு, வனத்துறை முதன்மை தலைமை வனப்பாது காவலர் சுப்ரத் மஹாபத்தர உள்ளிட்டோர் பங்கேற்றனர்.