மயிலாடுதுறை:சீர்காழி சட்டை நாதர் கோவிலுக்கு மே, 24ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோவில் சோழர் கால கட்டடக்கலை அமைப்பைக் கொண்டது.
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோவிலில் அம்பாள் இடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
இவ்வளவு சிறப்பு பெற்ற சட்டை நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோவில் திருப்பணிகளை பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,'சீர்காழி சட்டைநாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மே மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது. 20ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, 22ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், 24ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தின் போது 18 ஆயிரம் பக்கம், 16 தொகுப்புகளைக் கொண்ட திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது' என்றார்.
தொடர்ந்து குருமகா சன்னிதானம் கோவில் நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய பூச்செடிகளை நட்டு வைத்தார். இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.