புதுச்சேரி, : மளிகை கடையில் நுாதன முறையில் ரூ.13,500 அபேஸ் செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்,50; லெனின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி வாணிதாசன் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது, மளிகை கடைக்கு வந்த மர்ம நபர், முருகானந்தத்தை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, கடையில் அரிசி, நெய் விற்பனை விபரங்கள் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் கடையில் வேலை செய்த ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார். கல்லா பெட்டியில் உள்ள பணக் கட்டை எடுத்துக் கொடு என்றார். அதற்கு கீரத்தனா, 'முதலாளி சொல்லாமல் தர முடியாது' என்றார்.
உடன் மர்ம நபர், மொபைல்போன் இணைப்பில் இருந்த முருகானந்தத்திடம், 'அரிசிக்கு பதிலாக நெய் கேட்டால் மாற்றி தரமாட்டேன்' என்கிறார். நீங்கள் கூறுங்கள் என்றபடி, போனை கடை ஊழியர் கீர்த்தனாவிடம் கொடுத்தார்.
மொபைலில் பேசிய முருகானந்தம், கீர்த்தனாவிடம் கொடுமா எனக் கூறினார். அதன்பேரில் கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ. 13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார். உடன் அந்த நபர் வேகமாக புறப்பட்டு சென்றார். முருகானந்தம் கடைக்கு வந்த பிறகே, மர்ம நபர் நுாதன முறையில் பணத்தை 'அபேஸ்' செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.