பல்லடம்:பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவரிடம், 20க்கும் மேற்பட்ட காங்கயம் இன நாட்டு மாடுகள் உள்ளன. இவரின் தோட்டத்தில், நேற்று மாட்டு பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இது குறித்து, அவர் கூறியதாவது:
மாடுகளை பட்டியாபுரம் தாயாக வழிபட்டு வருகிறோம். மாட்டு பொங்கல் நாளில், மாடுகளை குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை சூடி அலங்கரித்தோம். அதன்பின், தெப்பக்குளம் கட்டி, அதில் பால், தண்ணீர் ஊற்றி, குளத்தின் மறுபுறம் முடக்கத்தான், ஆத்திமாறு, ஊஞ்சமாறு ஆகியவற்றை கயிறாக்கி கட்டுவோம். மாட்டு பொங்கலான இன்று (நேற்று) உழவுக்கு பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து பூஜை செய்தோம்.
மாடுகளுக்கு பொங்கல் படைத்து, கரும்பு மற்றும் தின்பண்டங்களை மாட்டின் கொம்புகளில் கட்டுவோம். தெப்பக்குளம் தாண்டி செல்லும் மாடுகள், முடக்கத்தான் கொடியை அறுத்துக்கொண்டு தெப்பக்குளத்தின் மறுபக்கம் செல்லவேண்டும். அவ்வாறு சென்றால்தான் விவசாய நிலத்தின் முடக்கு நீங்கியதாக அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்