வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு என்பதை தமிழகம் எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில், 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரியாக இருக்கும்' என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதற்கு திமுக.,வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் கவர்னர் உரையின்போது எதிர்த்து கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு என்றே குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் தமிழகம் எனக் குறிப்பிட்டதற்கு கவர்னர் ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த விளக்கம்:
கடந்த ஜன.,4ல் கவர்னர் மாளிகையில் 'காசி-தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை.

எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை 'பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.