திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில், இயற்கை உரம் மற்றும் மண்புழு தயாரிக்க, 2017 -- 18ம் ஆண்டு, 1 லட்சம் ரூபாய் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வாயிலாக நிதி ஒதுக்கப்பட்டு உரம் தயாரிப்பு நடந்து வந்தது.
அதன், வாயிலாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்த நிலையில், 'கொரோனா'வுக்கு பின் இந்த உரக்கிடங்கு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. இதனால் மூன்று ஆண்டுகளாக மண்புழு உரம் தயாரிக்கும் இடம் பாழடைந்து உள்ளது.
தற்போது, விவசாயிகள் நவரைப் பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் மண்புழு இயற்கை உரம் தயாரித்தால், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் மண்புழு உரம் தயாரிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.