அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, மாவட்ட எல்லை முடிவில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சென்னையை, தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி செல்கின்றன.
சுங்கச்சாவடி அருகே, டீ, காபி, உணவு பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.
உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிட்டு முடித்தவுடன், டீ குவளைகள், உணவு சாப்பிட்ட பேப்பர் பிளேட், பிஸ்கட் கவர், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை, கடையில் உள்ள குப்பைத் தொட்டியில் போடாமல், சாலை ஓரங்களில் வீசிச் செல்கின்றனர்.
மேலும், கடைக்காரர்களும், நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமும், தினசரி முறையாக குப்பையை அகற்றாமல், சாலை ஓரத்திலேயே எரித்து வருகின்றனர்.
இதனால், குப்பை சாலையின் இருபுறமும் மலைபோல குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்தபடி செல்கின்றனர். மேலும், தொடர்ந்து சேர்ந்து வரும் குப்பையால், நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.
திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுங்கசாவடி ஒப்பந்த பணிகளை எடுத்துள்ள தனியார் நிறுவனம், இப்பகுதிகளில் உள்ள குப்பையை முறையாக அகற்றவில்லை.
இதன் விளைவாக, மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு வரை, சாலையோரங்களில் குப்பை அதிகமாக சேர்கிறது.
சாலையோர கழிவுகளை அகற்றி, தேசிய நெடுஞ்சாலையை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.