கூடுவாஞ்சேரி:வண்டலுாரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு, காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று முன்தினம், லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து, கண்டு களித்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில், வண்டலுார் உயிரியல் பூங்காவில் இருந்து, 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, கோயம்பேடில் இருந்து, திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து, அவர் மீது மோதியது. இதில் அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான நபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரித்து வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, ராஜா தெருவைச் சேர்ந்த பாஸ்கர், 43, என்பவரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.