ராமநாதபுரம்:ராநமாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே கொடிக்குளத்தில் 350 ஆண்டுகளுக்கு முன் மடத்தில் அன்னதானம் வழங்க ஒரு ஊரையே தானமாக வழங்கிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
சத்திரக்குடி சே.கொடிக்குளம், கழுநீர் பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதனை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
ஒரு கடற்கரை பாறை கல் துாணின் இரு பக்கங்களிலும் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரன் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 26 வரிகளில் முதல் பக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் வருகிறது. ஸ்வஸ்திஸ்ரீ' எனத் தொடங்கி 'போவாராகவும்' என கல்வெட்டு முடிகிறது.
புண்ணிய காலத்தில் ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக ரகுனாத தேவர் அன்னதான பற்றுக்கு சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 என சொல்லப்பட்டுள்ளது. இதன்படி அது கி.பி.1672 ஆகும். கி.பி. 1646 முதல் 1676 வரை சேதுநாட்டை ஆண்ட ரகுநாத திருமலை சேதுபதி தனக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக தன் பெயரில் உருவாக்கிய ரகுநாத தேவர் அன்னதானப் பற்றுக்கு கல்வெட்டுள்ள கொடிக்குளம் என்ற ஊரை தானமாக வழங்கியுள்ளார்.
அன்னதானப் பற்று என்பது அன்னதானம் செய்யும் மடத்திற்கு தானமாக வழங்கிய உரிமை நிலம் ஆகும். இங்கு மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியுள்ளார். இத்தானத்திற்கு கெடுதல் செய்பவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் மாதா, பிதா, குருவையும், காராம் பசுவையும் கொன்ற தோஷத்தில் போவார்கள், என கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் இருந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வருபவர்களுக்கு உணவு, நீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் துாரத்திற்கு ஒன்று என்ற அளவில் பரவலாக மடம், சத்திரங்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கினர்.
இம்மன்னர்களில் முதன் முதலில் அன்னதானச் சத்திரங்களை உருவாக்கும் வழக்கத்தை கொண்டு வந்தவர் ரகுநாத திருமலை சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. மன்னரால் இவ்வூரில் கட்டப்பட்ட அன்னதான மடம் கோயிலின் தெற்குப்பகுதியில் இருந்து அழிந்துள்ளது.
எஞ்சிய அதன் 10 அடி நீளமுள்ள சிறிய சுவர் தற்போதும் இங்கு உள்ளது. இக்கோயிலில் சங்க இலக்கியங்களில் பாலை திணைக்குரியதாக சொல்லப்படும் மருத்துவக் குணமுள்ள உகாய் மரம் வளர்ந்து வருகிறது. இம்மரம் ஆங்கிலத்தில் மிஸ்வாக் என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.