சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பொறுப்பேற்று, அவரது தலைமையில் முதல் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை மக்களைக் கவரும் வகையில், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2023 - 24ம் நிதியாண்டில், சொத்து வரி உயர்வுக்கு விலக்கு அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில், கடந்த 2016ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது.
இதனால், மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை, சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். கடந்த 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
துவக்கம்
இதில் சென்னை மாநகராட்சியில், தி.மு.க., பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகராட்சியின் மேயராக, பட்டியலினத்தைச் சேர்ந்த பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
ஆனால், அந்த பட்ஜெட் பெரும்பாலும், மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்ததாகவே இருந்தது.
எனவே, புதிய அறிவிப்புகளும், மக்களைக் கவரும் திட்டங்களும் பெரிய அளவில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 2023 - 24ம் நிதியாண்டுக்கு மேயர் பிரியா தலைமையில், சென்னை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாட்களில், நிலைக்குழு தலைவர்கள் உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து, தனித்தனி குழுக்களாக ஆலோசித்து உள்ளனர்.
மேலும், வரும் 25ம் தேதி அனைத்து குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
எதிர்பார்ப்பு
அதேபோல், மண்டலக்குழு தலைவர்களிடம், வார்டு வாரியாக வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யவும், புதிய திட்டங்கள், தேவைகள் குறித்து விரிவான விபரங்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்., மாதத்தில், மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, நிலைக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:
கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது ஆலோசனையின் கீழ் தயாரிக்கப்படும் முதல் பட்ஜெட் இது.
எனவே, வரும் 2023 - 2024ம் நிதியாண்டு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர், மேம்பாலம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன் வாயிலாக, மக்களைக் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2022 - 23ம் நிதியாண்டில், சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும். அதன்படி, 2023 - 24ம் நிதியாண்டிலும் சொத்து வரி குறிப்பிட்ட சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது.
அதேநேரம், பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையிலும், லோக்சபா தேர்தலை முன்னிட்டும், வரும் நிதியாண்டில் சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரி உயர்வில் விலக்கு தொடர்பாக, மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.