கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கருத்து கேட்பு மற்றும் மனு மீதான விசாரணை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் துறையில் பொதுமக்கள் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் மற்றும் மனு மீது விசாரணை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., மோகன்ராஜ் தலைமை தாங்கி, மனுதாரர்கள் நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட 11 மற்றும் புதியதாக மனு அளித்த 9 பேர் என, 20 பேர் பங்கேற்றனர்.
அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பண மோசடி தொடர்பாக அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது.
இதில் 5 நபர்களின் மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் 15 நபர்களின் மனுக்களை மறு விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண உத்தரவிடப்பட்டது. டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், பழனி, தனிபிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.