பாகூர் : நண்பர் மீது நடந்தப்பட்ட தாக்குதலை கண்டித்ததால், ஆத்திரமடைந்த ரவுடி கும்பல், பிளம்பரை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கடலுார் மாவட்டம், கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ் (எ) தமிழரசன்,30; பிளம்பர். இவர், கடந்த 17ம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டில் இருந்தபோது, மூன்று பேர், அவரை வெளியே அழைத்து சென்றனர். இரவு வீடு திரும்பாத நிலையில், நேற்று முன்தினம் காலை பாகூர் அடுத்த அரங்கனுார் சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி தாடி அய்யனார் தனது கூட்டாளிகளான அர்ஜூனன் (எ) ஆனந்த், கொத்துக்கா (எ) ஏழுமலை, சிங்கிரிகோவில் பார்த்தசாரதி, கார்த்திகேயன், சந்தோஷ், புதுக்கடை விஜயகுமார், வேல்முருகன், கீழ்குமாரமங்கலம் தவமணி ஆகியோர், தமிழரசனை அடித்து கொன்றது தெரிய வந்தது.
அதன்பேரில், அவர்கள் 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழரசனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் குணா,25; என்பவரும், கரிக்கலாம்பாக்கம் ரவுடி தாடி அய்யனார் கோஷ்டியில் இருந்தனர்.
இந்நிலையில், குணா திடீரென எதிர் கோஷ்டியான செல்லஞ்சேரி ரவுடி தேவாவுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதனால், தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள், குணா மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் குணா, ரவுடி தேவாவுடன் சேர்ந்து, தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக, தாடி அய்யனாருக்கு தகவல் கிடைத்தது.
அதனால், கடந்த 17 ம் தேதி இரவு தாடி அய்யனார், அரங்கனுார் சுடுகாடு பகுதிக்கு தனது கூட்டாளிகளுடன் சென்றார். அங்கு, குணாவை அழைத்து வந்து, எனக்கு எதிராக செயல்படுகிறாயா எனக் கேட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கினார்.
அப்போது, அங்கிருந்த தமிழரசன், குணா தனது நண்பர். அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரை விட்டுவிடுமாறு , தாடி அய்யனாரிடம் கெஞ்சினார். ஆனால், அந்த கும்பல் குணாவை தொடர்ந்து தாக்கியது.
அதில் படுகாயமடைந்த குணாவை, தமிழரசன் மீட்டு, தனது நண்பர்கள் உதவியுடன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர், தாடி அய்யனாருக்கு போன் செய்து நான் கெஞ்சி கேட்டும் நீ குணாவை விடவில்லை. உன்னை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அன்று இரவு 11 மணிக்கு தாடி அய்யனாரின் கூட்டாளிகள், தமிழரசனின் வீட்டிற்கு சென்று உன்னிடம் பேச வேண்டும் எனக்கூறி, அவரை அரங்கனுார் சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு தனது கூட்டாளிகளுடன் இருந்த தாடி அய்யனார், என்னையே மிரட்டுகிறாயா எனக் கேட்டு தமிழரசனை அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
தாடி அய்யனார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதில், படுகாயமடைந்த குணா, கடந்த 17 ம் தேதி இரவு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் காயத்திற்கான காரணம் கேட்டபோது, பைக்கில் இருந்து விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.அவர், உண்மையான தகவலை கூறி இருந்தால், அங்கிருந்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சென்றிருந்தால், தமிழரசன் கொலை தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.