புதுடில்லி: '' நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயவேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு தேர்வான 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
'ரோஜர் மேளா' பாஜ., அரசின் சிறந்த நிர்வாகத்திற்கு அடையாளமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் வழக்கமான வாக்குறுதிகளே பல்வேறு காரணங்களினால் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யும் முறை மாறியுள்ளது. பணி நியமனங்களில் கால நேரம் மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இன்று பணி நியமன ஆணைகளை பெறுபவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்குகிறது. அரசின் அங்கமாக இருக்கும் நீங்கள், புதிய இந்தியாவில் துடிப்பான செயல்பாட்டாளர்களாக இருப்பீர்கள். வணிக உலகில், ' நுகர்வோரே சரியானவர்கள் ' என சொல்லப்படுகிறது. அதேபோல், ' சாமானிய மக்களே எப்போதும் சரியானவர்கள்' என்பது ஆட்சியின் முழக்கமாக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். அதனுடன், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.