காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதி, பல்லவர்மேடு மேற்கு பகுதி, எஸ்.வி.என்., பிள்ளை தெருவிற்கு செல்லும் சாலை என, மும்முனை சாலை சந்திப்புப் பகுதியில், மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில், சாலையோரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை.
இதனால், பிள்ளையார் பாளையம் பகுதியில் இருந்து எஸ்.வி.என்., பிள்ளை தெருவிற்கு செல்ல வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது, தடுப்புச்சுவர் இல்லாத பகுதி வழியாக மஞ்சள் நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
அதேபோல எஸ்.வி.என்., பிள்ளை தெருவில் இருந்து பிள்ளயைார் பாளையம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும் கால்வாய்க்குள் தவறி விழும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் முழுமையாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.