திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில், கடந்த ஜன., 18ல், மனித எலும்புக்கூடுகள் தனித்தனியே சிதறி கிடந்தன.
கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அளித்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில், கொலையானது திருக்கழுக்குன்றம், மாதுளங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன், 45, என்பதும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
சந்திரன் வீட்டிற்கு அவ்வப்போது வந்த, சாலவாக்கம், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 27, என்பவருக்கு, சந்திரன் மனைவி சித்ராவுக்கும், 40, தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச., 16ல், வெளியே சென்று வீடு திரும்பிய சந்திரன், அவர்களின் உல்லாசத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவர்களை தாக்கி உள்ளார்.
இதையடுத்து, மனைவி, கள்ளக்காதலன் ஆகியோர் இணைந்து, சந்திரன் தலையில் அடித்துக் கொன்று, உடலை ஏரியில் புதைத்து தப்பினர். தற்போது, இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.