பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி, நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இக்குளத்து நீரை சுற்றுப்புறப் பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில், உள்ளாட்சி அமைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், குளத்து நீர் கண்டுகொள்ளப்படவில்லை. கால்நடைகள் குடிப்பதற்கு மட்டுமே, குளத்து நீர் பயன்படுகிறது.
சமீப காலமாக, இதன் பராமரிப்பு மோசமாக உள்ளது. சுற்றி, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்போல மாறிவிட்டது. குப்பைக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி, குளத்தில் வீசுகின்றனர்.
தண்ணீரில் மிதக்கும் கழிவுகளை சுத்தம் செய்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சுற்றுச்சுவர் அமைத்தால், குளம் பாதுகாக்கப்படும். பொதுமக்களும் நடைபயிற்சி செல்ல வசதியாக இருக்கும்.
அதேநேரத்தில், அல்லித் தாமரை பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இயற்கை சூழ்ந்த இடமாகவும் மாறும். இதைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.