உடுமலை;தை அமாவாசைக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, நேற்று முதலே, பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வந்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆன்மிகம் மற்றும் சுற்றுலாதலமாக உள்ள திருமூர்த்திமலைக்கு, ஆண்டு தோறும், தை, புரட்டாசி, ஆடி அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும்.
உடுமலை, பொள்ளாச்சி என சுற்றுப்புற விவசாயிகள், தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன், திருமூர்த்திமலைக்கு வருவதையும், வேளாண் வளம், கால்நடைச்செல்வங்கள் பெருக, மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து, மும்மூர்த்திகளை வழிபடுவதை பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.
இன்று தை அமாவாசை தினமாக உள்ளதால், சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், நுாற்றுக்கணக்கான ரேக்ளா, சவாரி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்தனர்.
இதனால், திருமூர்த்திமலை ரோடுகளில், பழமையான மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு போல் திருமூர்த்திமலை களைகட்டியது.
அதே போல், பிரசித்தி பெற்ற, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, பஞ்சலிங்கம் அருவியில், நீராடி, மும்மூர்த்திகளை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், நேற்று மாலை முதலே, கோவில் வளாகம் மற்றும் பிரதான ரோடுகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும், பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபடும் வழக்கமும் பல நுாறு ஆண்டுகளாக தொடர்கிறது.
இதற்காக, கோவில் வளாகத்தில், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசை தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. நுாற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.