பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நேற்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. வனப்பகுதியிலிருந்து, 85 அடி உயரம் உள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக ஆனைமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து உப்பாற்றங்கரையில், கம்பத்துக்கு வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், முறைதாரர்கள், அருளாளிகள் முன்னிலையில், கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில், நேற்று காலை, 8:34 மணிக்கு, 85 அடி உயரம் உள்ள கொடிக்கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பிப்.,3 இரவு, 1:00 மணிக்கு மயான பூஜையும், பிப்., 5 காலை 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் குண்டம் இறங்குதல், காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது.
பிப்., 8 காலை 11:30 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.