அவிநாசி:அரசின் சார்பில் வழங்கப்பட்டு, பயனற்று கிடக்கும் வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்வது தொடர்பாக, அரசு அலுவலகங்களில், பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், இலவச வீட்டுமனையிடங்கள் ஒதுக்கப்பட்டு, வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டன.
சிலர், தங்களுக்கு கிடைத்த பட்டாவை, வேறு சிலருக்கு விற்பனை செய்தும் விட்டனர். சிலர் பட்டா பெறப்பட்ட இடத்தில் வீடுகட்டி குடியேறாமல், வேறு இடங்களில் குடியிருக்கின்றனர். சில இடங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்கள், அருகேயுள்ள நில உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 'செக்' வைக்கும் விதமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வீட்டுமனைப்பட்டாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தாலுகா வாரியாக, இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றும், அந்த இடத்தில் குடியிருக்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தாலுகா அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில், பொது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில், அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.