செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு, 11:00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திப் பாடல், அம்மன் தாலாட்டுப் பாடல் பாடினர்.
தை மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால், மேல்மலையனுார் கோவில் அருகே செல்ல முடியாதபடி முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உற்சவத்தில், விழுப்புரம் கலெக்டர் மோகன் பங்கேற்றார்.
விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவல் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில், 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.