ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசை அன்று ஆன்மிக மரபை மீறி வெள்ளி தேரோட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இக்கோயிலில் தை, மாசி, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் ஆடி திருக்கல்யாணம் 7ம் நாள் விழா ஆகிய ஆண்டுக்கு 4 நாட்கள் கோயிலில் உள்ள 20 அடி உயர வெள்ளி தேர் இரவில் மின்அலங்காரத்துடன் ரத வீதியில் உலா வரும்.
இது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வரும் ஆன்மீக மரபு.
இந்த மரபை மீறி நேற்று முன் தினம் (ஜன., 21ல்) தை அமாவாசை அன்று வெள்ளி தேர் வீதி உலாவை கோயில் அதிகாரி ரத்து செய்தார். இத்தேர் வீலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால் தேரோட்டம் நடக்கவில்லை. அன்றிரவு வெள்ளி தேரோட்டத்தை எதிர்பார்த்து வீதியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறியதாவது: அக். 12ல் வெள்ளி தேரை புதுப்பித்த போது வீலில் சேதமானது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும்.
அதனை சரி செய்ய முன்வரவில்லை. இதனால் பல நூறு ஆண்டுகளாக நடந்த வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை.
தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் கறப்பதில் கவனம் செலுத்தும் அதிகாரிகள், ஆன்மிக மரபுகளை காற்றில் பறக்க விட்டு மத கலாசாரத்தை சீரழிக்கின்றனர் என்றார்.