திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது, இன்னும் காலம் உள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கரூர் செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமனதாக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். வேட்பாளர் நிறுத்தபட்டால், அவர்களின் பின்னால் அனைவரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இடைத்தேர்தலில் பா.ஜ., போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பப்பட்டாலும் நம் பலம் என்ன, ஓட்டுகள் இரண்டு, மூன்றாக பிரிந்தால் என்ன ஆகும் போன்றவைகள் எல்லாம் பார்க்க வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்ல முடியாது.
வேட்பாளர் குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் உள்ளது. நிறுத்தக்கூடிய ஒரு வேட்பாளர் வெற்றிப்பெறுவதற்கு தேவையான எல்லாவிதமான உதவிகளையும், ஆதரவையும் செய்ய வேண்டியது கூட்டணியின் கடமை. இந்த இடைத்தேர்தல் பலபரீட்சை கிடையாது; கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம். இதில் போட்டியோ, பொறாமையோ கிடையாது. அதிமுக பெரிய கட்சி, அதில் ஏற்கனவே நின்று வெற்றிப்பெற்று அமைச்சரான வேட்பாளர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
அறநிலையத்துறை
மற்ற கட்சிகளை பற்றி பேச ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் தான் குழப்பம் உள்ளது. அறநிலையத்துறை தொடர்பாக நான் பேசிய கருத்துகள் ஆர்.டி.ஐ., மூலமாக பெறப்பட்ட உண்மைகள். திருச்செந்தூர் கோவிலில் 5,309 மாடுகள் காணாமல் போனதை மறுத்து அமைச்சர் சேகர்பாபு பேசட்டும். நாம் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் கருத்தினை ஆதாரப்பூர்வமாக சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.