திருமங்கலம், நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, 'எஸ்கலேட்டர்' குப்பையால் பாழடைந்து பயன்பாடின்றி உள்ளதால், பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அண்ணா நகர் மண்டலம் 104வது வார்டில், திருமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள 100 அடி சாலையில், பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக, சென்னை மாநகராட்சி பராமரிப்பில், இருபாதைகளிலும் 'எஸ்கலேட்டர்' உள்ளது. இதை தற்போது, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சாலையைக் கடந்து செல்ல பொதுமக்கள் வசதிக்காக இந்த எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு பாதுகாவலர் உள்ளார்.
இங்கு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இந்த இயந்திரம் இயக்கப்படும். இதனால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் பயனடைந்து வந்தனர்.
தற்போது, இந்த எஸ்கலேட்டர் ஒருபுறமான, பாடியில் இருந்து திருமங்கலத்தை நோக்கிச் செல்லும் பாதையில், பல மாதங்களாக பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கிறது.
தற்போது, எஸ்கலேட்டர் முழுதும் இலைகள் மற்றும் குப்பை குவிந்து கிடக்கின்றன.
இதனால், இதை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், தற்போது படிகளில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையால், முதியவர்கள் கடும் அவதியடைகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.