சென்னை : வீட்டை தாமதமாக ஒப்படைத்த புகாரில் இழப்பீடு தர மறுத்து வரும் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க ரியல் எஸ்டேட் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில், 2012ல் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. அதில் வீடு வாங்க, நவீன் சந்திரன் என்பவர், 92.67 லட்ச ரூபாயை செலுத்தினார்.
இதன்படி, 2015ல் ஒப்படைக்க வேண்டிய வீட்டை, மிகவும் தாமதமாக, 2018ல் கட்டுமான நிறுவனம் ஒப்படைத்து உள்ளது.
இது குறித்து நவீன் சந்திரன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2020ல் முறையிட்டார்.
இதன் அடிப்டையில், அவருக்கு, 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ரியல் எஸ்டேட் ஆணையம், 2022ல் உத்தரவிட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்காத நிலையில் அதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை வழங்காமல் கட்டுமான நிறுவனம் தாமதம் செய்கிறது.
எனவே, அந்நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, வருவாய் மீட்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.