வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக, இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி, தற்போது தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளராக, மறைந்த எம்.எல்.ஏ., திருமகனின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை
'தேர்தலில் நான் போட்டியிடவில்லை' என, இளங்கோவன் அறிவித்த நிலையில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: இளங்கோவன் குடும்பத்தாருக்கு மட்டுமே வாய்ப்பு தருவதில், கட்சி மேலிடம் உறுதியாக இருந்தது. இதுகுறித்து உள்ளூர் சிறப்புப் பிரிவு போலீசார், உளவுப் பிரிவு போலீசார், பல்வேறு மட்டத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், 'இளங்கோவன் குடும்பத்தில் மற்றவர்களை விட, அவரையே நிறுத்துவது வெற்றிக்கு வழி வகுக்கும். மக்கள் செல்வாக்கு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளிடமும் தொடர்புடையவர்' என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பலம் சேர்க்கும்
மேலும், தி.மு.க., மற்றும் தமிழக அரசால் நேரடியாக பேச இயலாத இடங்களில், தி.மு.க., குரலாக ஒலிக்க, இளங்கோவனே பொருத்தமானவர் என்றும் கூறப்பட்டுள்ளது. எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும், அவர் கடுமையாக சாடுவார்.
வரும் 2024ல் லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், காங்., சார்பில் இவரது பிரசாரம் பலம் சேர்க்கும்; தங்களுக்காக பேசும்படி, அவரிடம் வலியுறுத்தலாம்.
அவரது மகன் உள்ளிட்ட உறவினர்களிடம், இதை எதிர்பார்க்க முடியாது. இதை உளவுப்பிரிவு அறிக்கை தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது.
இதன் பின்தான், முதல்வர் ஸ்டாலினே, இளங்கோவன் வீட்டிற்கு சென்று பேசினார். காங்., தலைமைக்கும், தி.மு.க.,வின் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே, இளங்கோவன் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவ்வாறு தி.மு.க., வினர் கூறினர்.