''பல கோடி ரூபாய் செலவழிச்சு கட்டிய கடைகள், ஏழு மாசமா பூட்டிக் கிடக்கு வே...'' என்றபடியே, சூடான மெது வடையை கடித்தார், அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''வேலுார் புது பஸ் ஸ்டாண்ட் இருக்குல்லா... இதை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, 53 கோடி ரூபாய் செலவழிச்சு, விரிவாக்கம் செஞ்சாவ... போன வருஷம், ஜூன் மாசம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரு வே...
''பஸ் ஸ்டாண்ட்ல, 83 கடைகள் கட்டியிருக்காவ... இதுல, 68 கடைகளை மட்டும் வாடகைக்கு விட முடிவு செஞ்சாவ வே... ஒரு கடைக்கு, 20 லட்சம் ரூபாய், 'அட்வான்ஸ்' வாடகை, 50 ஆயிரம்... இது தவிர கவுன்சிலர்களுக்கு தனியா, 5 லட்சம் ரூபாய் வெட்டணும்...
''வாடகை அதிகம்கிறதால, கடையை எடுக்க யாரும் வரல வே... இப்ப, ஒரு பெரிய நிறுவனத்துக்கு மொத்தமா எல்லா கடைகளையும் வாடகைக்கு விடப் போறாவளாம்... அதனால தான், மத்தவங்க எடுக்க முடியாதபடி, வாடகையை முதல்லயே உசத்தி அறிவிச்சதா, வியாபாரிகள் குற்றம் சாட்டுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கட்சிக்காக உழைக்கறவா சென்னையில மட்டும் தான் இருக்காளான்னு கேக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., ரங்கநாதன், சேமிப்பு கிடங்கு நிறுவன வாரியத்தின் தலைவராகவும், தி.மு.க., பிரசார பாடகர் இறையன்பன் குத்துாஸ், சிறுபான்மை ஆணைய துணை தலைவராகவும், சமீபத்துல நியமிக்கப்பட்டா ஓய்...
''ஏற்கனவே, தி.மு.க., தலைமை நிலைய செயலரான, 'துறைமுகம்' காஜாவுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக வாரிய தலைவர் பதவி குடுத்திருக்கா... 'வாரிய தலைவர் பதவிகளை, சென்னையை சேர்ந்தவாளுக்கே தராளே... நாங்க எல்லாம் கட்சிக்கு உழைக்கலையா'ன்னு, மற்ற மாவட்ட கட்சியினர் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அதிகாரிகளுக்கு, 'டோஸ்' கிடைச்ச கதையை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை ஏர்போர்ட் விரிவாக்கம், மேற்கு பைபாஸ் ரோடு, தொழிற்பேட்டை போன்ற திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகள் இருக்குதுங்க... அரசு தரப்புல நிதி ஒதுக்கிட்டாலும், வருவாய் துறை அதிகாரி கள் மந்தமா இருக்கிறதால, திட்டம் நகரவே மாட்டேங்குது...
''மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்றதை, கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் காது கொடுத்து கேட்கிறது இல்லை... இதை, துறை அமைச்சரிடம் சொல்லி, செந்தில் பாலாஜி வருத்தப்பட்டாருங்க... அவரும், உடனே கோவைக்கு பறந்து, வருவாய் துறை அதிகாரிகள் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டாருங்க...
''கூட்டத்துல அமைச்சர் பேசுறப்ப, 'என் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு, நான் தான் மின் துறை அமைச்சர்... அதே மாதிரி, கோவைக்கு செந்தில் பாலாஜி தான் வருவாய் துறை அமைச்சர்... மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு எல்லா துறைக்குமான கூட்டு பொறுப்பு இருக்குது... அதை புரிஞ்சு அதிகாரிகள் செயல்படணும்'னு, வகுப்பு எடுத்தாருங்க...
''செந்தில் பாலாஜி பேசுறப்ப, 'உங்க யாரையும் சட்டத்துக்கு புறம்பா வேலை செய்யச் சொல்லலை... செய்ற வேலையை, விரைவா செய்யுங்கன்னு தான் சொல்றோம்'னு, 'பொடி' வச்சு பேசினாருங்க... இதனால, அதிகாரிகள் அரண்டு போயிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.