திண்டிவனம்: திண்டிவனம் அருகே கணவரைத் தாக்கிய மனைவி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பூந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்கிற பக்கிரி, 36; கொத்தனார். இவரது மனைவி உமா. இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
சில தினங்களுக்கு முன் அவர்களுக்குள், மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் உமா, கோபித்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் மனைவியை அழைக்க ராஜா அங்கு சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உமா, அவரது தம்பி முருகன், அக்கா ராஜேஸ்வரி ஆகியோர், முருகனை இரும்பு பைப்பால் தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜா கொடுத்த புகாரின் பேரில், உமா, முருகன், ராஜேஸ்வரி ஆகியோர் மீது வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.