வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், 55 முதல் 60 சதவீதம் ஓட்டுக்களை பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு 'டிபாசிட்' கிடைக்காத வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க., அமைச்சர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், பிப்., 27ல் நடக்கிறது. கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன், 45 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, த.மா.கா., வேட்பாளர் யுவராஜா, 40 சதவீதம் ஓட்டுக்களை பெற்று தோல்வி அடைந்தார்.
தி.மு.க., ஆட்சி அமைந்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், 'காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு, 55 சதவீதம் முதல் 60 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்க வேண்டும்.
'எதிர்க்கட்சிகள் சார்பில், எந்த கட்சி போட்டியிட்டாலும் 'டிபாசிட்' வாங்கக் கூடாது' என, தி.மு.க., தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுள்ள, 11 அமைச்சர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் இருவரும் தேர்தல் செலவுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
வரும் 27ம் தேதி முதல் 11 அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள 20 பேர் என மொத்தம் 31 பேர், ஓட்டு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்.
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், முதல்வர் ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். காங்., வேட்பாளர் இளங்கோவன், இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்டோர், அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
- நமது நிருபர் -