கோவை: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஏர் அரேபியா' விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் விமானத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அதில் அவர் மேற்குவங்கம், கோல்கட்டாவை சேர்ந்தவர் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அவரிடம் ஷார்ஜாவிலிருந்து கோல்கட்டா செல்லாமல் கோவை வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். தொடர்ந்து குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த நபரை தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால், அவரால் தேசிய கீதத்தை முழுமையாக பாட முடியவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் உசேன், 28 எனத் தெரிந்தது. மேலும், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்ததும் தெரிந்தது.
அன்வர் உசேன், 2018-ம் ஆண்டு திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து உள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர், போலியான பிறப்பு சான்றிதழ் தயார் செய்து, மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா முகவரியில் ஆதார் எண் பெற்றார். இந்த ஆவணங்கள் வாயிலாக, 2020ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றார்.
அந்த பாஸ்போர்ட் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
இதற்காகவே அவர் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது தெரிந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அன்வர் உசேனை கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.