புதுடில்லி: இந்தியாவின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முர்மு ஏற்று கொண்டார்.

பரம்வீர் சக்ரா மற்றும் அசோக் சக்ரா விருது பெற்றவர்களுடன் இந்த அணிவகுப்பு துவங்கியது. இதனை தொடர்ந்து, குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. தற்போது, உலகிலேயே, இந்தியாவில் மட்டும் தான் குதிரைப்படை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிவகுப்பில் அர்ஜூனா பீரங்கியுடன் ராணுவ வீரர்கள், கேப்டன் அமன்ஜித் சிங் தலைமையில் அணிவகுத்தனர்.
என்ஏஜி ஏவுகணை அமைப்புடன், சித்தார்த்தா தியாகி தலைமையில் காலாப்படையினர் பங்கேற்றனர்.
கே-9 வஜ்ரா 5 துப்பாக்கி அமைப்பு, பிரம்மோஸ் ஏவுகணை,ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை,
சிஆர்பிஎப் பெண் வீராங்கனைகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
80 இசைக்கலைஞர்களுடன் கடற்படை இசைக்குழுவினர், 'ஜெய் பாரதி' என்ற கடற்படை பாடலை பாடியபடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
கடற்படை கமாண்டர் திஷா அம்ரிதி தலைமையில் 144 இளம் வீரர்கள் பங்கேற்றனர். இதில், முதன்முறையாக 3 வீராங்கனைகள் மற்றும் 3 அக்னி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ராணுவ வீரர்களின் மோட்டார் பைக் சாகசம் செய்தபடி அணிவகுப்பில் பங்கேற்றனர். மோட்டார் சைக்கிளில் மனித பிரமீடு அமைத்து பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தனர்.
இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்திற்கு சொந்தமான 4 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசம் நிகழ்த்தின.
தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதை குறிக்கும் வகையில், இந்த ஆண்டு அணிவகுப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. இந்த ஆண்டு அணிவகுப்பில் முதல்முறையாக சிஆர்பிஎப் சார்பில் பெண் வீராங்கனைகள் மட்டுமே கொண்ட அணி பங்கேற்றது.
எகிப்து வீரர்கள்

இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்முறையாக எகிப்து ஆயுதப்படைகளும் பங்கேற்றுள்ளன. அந்நாட்டு ராணுவத்தின் கலெனல் மெக்மூத் முகமது அப்தெல் படா எல் கராசவி தலைமையில் எகிப்து ராணுவத்தின் இசைக்குழு மற்றும் அணிவகுப்பு குழுவினரும் பங்கேற்றனர்.