வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து, அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி, வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கவர்னர் ரவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு விடுதலை அடைந்ததன் பெரும் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். நம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நமது சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது.
நீண்ட சுதந்திர போராட்ட களத்தில் முன்னணி வீரர்கள் தவிர பல வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே போனது. அவர்களை கவுரப்படுத்தவும் அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமையும் நம் முன் உள்ளது.
மேலும் நமது தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்கள் செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொது வெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தேசம் அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுகாக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களை பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை.

இது சம்பந்ததமாக உங்கள் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சி மாணர்களை நியமிக்க வேண்டும்.பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு, அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இது வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி கடிதத்தில் கூறியுள்ளார்.