கோவை: கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் தான் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை படித்தார். இந்த கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்று கொண்டு,அண்ணாமலை பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வோம். நான் இங்கு நிற்பது என்னை பற்றி பேசவில்லை. என்னை கொண்டு வந்து நிறுத்தியவர்களை பேசுவதற்காக. எனது தந்தை தாய் இங்கு வந்துள்ளனர். அவர்கள் வந்திருக்கக்கூடிய முதல் மேடை . எங்கே சென்றிருந்தாலும் கூட, எனக்கு ஞாபகம் இருக்கிறது. 2002ல் இந்த கல்லூரியில் சேர வந்த போது, டிரங்க் பெட்டியுடன் வந்து நின்றோம். கல்லூரியில் இருந்து 3 பேருந்துகளை மாறி இங்கு வந்து நின்றோம்.
இதை பார்த்த போது எனது தந்தையிடம் சொன்னது, இந்த கல்லூரி நமக்கு சரியா இருக்குமா என்று சொன்னேன் . வந்திருக்கக்கூடிய பாதை, பிறந்த இடம், வசித்த இடம் எல்லாம். ஆனால் என்னை மனிதனாக மாற்றி, சமுதாயத்தில் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும்கூட இந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் எங்கு சென்றாலும் கூட எங்கிருந்து வந்தோம், இப்போதும் கூட மறக்காமல் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால், பிஎஸ்ஜி கல்லூரி மட்டும் தான் காரணம். அதை பிஎஸ்ஜி வால்யுஸ் என்று சொல்லுவோம். எதை செய்தாலும் கூட அதை மனித குலத்திற்காக செய்ய வேண்டும். மக்களுடைய நன்மைக்காக அதை செய்ய வேண்டும். நம் மூலமாக நான்கு நபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற விதையை விதைத்தது பிஎஸ்ஜி கல்லூரி.
என்னுடைய துறைத்தலைவர் மோகன்ராம் மிகஅற்புதமான மனிதர். அவர் வகுப்பு, பாடம் எல்லாம் அவருக்கு நிகர் யாரும் இல்லை. அவர் எனது பெரிய பாக்கியம். நான் அவர் முன் மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். அது சரி கிடையாது. இருந்தும், இந்த தருணத்தில் அவருக்கு எனது நன்றிகள், வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கல்லூரியில் அப்போதைய முதல்வர் ருத்ரமூர்த்தி இருந்தார். இரண்டு முறை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். இரண்டு முறை குறும்பு செய்ததற்காக. அப்போது, தண்டனை என்பது, ஒரு மாணவர், ஒரு குரூப்பில் சில விஷயங்கள் நடந்திருக்கும் போது, ஜென்டில் நட்ஜ் செய்து நல்ல பாதைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் ரொம்ப உத்தம மனது கொண்ட மனிதர். அவரும் இங்கு அமர்ந்துள்ளார். அவருக்கும் நன்றியும் வாழ்த்துகளையும் கூறி கொள்கிறேன்.
எனக்கு பயிற்று வித்த பேராசிரியர்கள் இங்கு அமர்ந்துள்ளனர். குறிப்பாக இந்த கல்லூரியின் தற்போது முதல்வராக இருக்கும் பிரகாசம் இங்கு அமர்ந்துள்ளார். பிஎஸ்ஜி பிரகாஷ் சார் உள்ளார். எனக்கு பயிற்று வித்த பேராசிரியர்கள் இங்கு உள்ளனர்.இரண்டு பேராசிரியர்களை இழந்திருக்கிறேன் கே ஏ ஜெகதீசன், சுந்தர் ராஜன் இல்லை. ஆண்டவனிடம் இருக்கிறார். நிச்சயமாக மேல் இருந்து ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
அவர்களது குடும்பத்தினரை நினைத்து பார்க்கிறேன்.எங்களுக்கு பாடம் கற்று கொடுத்த இரண்டு நபர்கள் இப்போது இல்லை என்பது சின்ன வெற்றிடம் தான். அதே நேரத்தில் 2002 முதல் 2007 வரை பிஎஸ்ஜி சாண்ட்விச் மெக்கானிக்கல் என்பது மிகுந்த அற்புதமான வகுப்பு. அனைவரும் விட்டு கொடுத்து, ஒருவர் ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு அற்புதமான வகுப்பு. 57 பேரும் நன்றாக இருக்கிறார்கள். என்னை விட மிகச்சிறப்பாக ஆளுமையாக வேறு வேறு இடத்தில் பணி செய்து கொண்டுருக்கிறார்கள். என்னை போல் சில பேர் மீடியா வெளிச்சத்தில் இல்லை என்றாலும் அவர்கள் செய்யும் பணி என்பது மிகவும் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம், இந்தியா அளவில் எனது சகோதரர்கள் அனைவரும் வேலை செய்து கொண்டுள்ளனர். இந்த விருது என்பது உண்மையாக அவர்களை சாரும். அதனால் எனது பிஎஸ்ஜி 2002 -2007 வரை என்னுடன் படித்த 57 பேரும் இந்த விருதை வாங்கியதாக கருதுகிறேன். இது முழுவதும் அவர்களை சாரும்.
இந்த நேரத்தில் எனது மனைவியால் இங்கு வர முடியவில்லை. குழந்தையை பார்த்து கொள்வதற்காக அங்கு இருக்கிறார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது என்னை பொறுத்தவரை, மாதா, பிதா, குரு,தெய்வம், மனைவி என்று இருக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. எனது மனைவி சார்பாக அவரது தந்தை தாய் வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்லி. எப்போதும் என்னுடன் நிற்கும் எனது அக்கா வந்துள்ளார். அவருக்கு நன்றி சொல்லி என்னுடன் படித்த நண்பர்களுக்கும் நன்றி சொல்லுவதுடன், எப்போதும் பிஎஸ்ஜி சொல்லி கொடுத்த பாதையில் இருந்து நான் தடம் மாற மாட்டேன் என ஒற்றை வார்த்தை சொல்லி மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்திருக்கிறீர்கள். அந்த கவுரவத்திற்கு நான் தகுதியானவனா என தெரியாது. ஆனால், தகுதிப்படுத்தி கொள்வேன் . இவ்வாறு அண்ணாமலை பேசினார்.