வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜன.,27) காலை மஹாகும்பாபிஷேகம் 150 சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிறப்பாக நடந்தது. பக்தர்கர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
ராஜகோபுரம், தங்கவிமானங்களில் ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இந்த சிறப்பான கும்பாபிஷேகத்தை தினமலர் இணையதளத்தில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்தனர்.

இக்கோயிலில் 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அதன்படி 2018ல் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. 16 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக 2 மாதங்களாக கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன.

ஜன., 18ல் ராஜகோபுரம், உப சன்னதிகளில் கோபுர கலசங்களில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. ஜன., 21 ல் திருஆவினன்குடி கோயிலில் கஜ, பரி ஆநிரை பூஜைகள் நடந்தது. அர்ச்சகர்கள் சார்பில் சண்முக நதியில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. வேள்வி பூஜைக்காக சூரியஒளியிலிருந்து அக்னி எடுத்து வர ஜன., 23ல் வேள்வி பூஜை துவங்கியது.

இன்று காலை 8:30 மணிக்கு வேள்வி சாலையிலிருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்க தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் தங்க விமான கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கோயிலில் உள்ள தெய்வங்களின் கோபுர சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.