மயிலாடுதுறை: குட்கா பொருட்களுக்கான தடை நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என மயிலாடுதுறையில் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டடத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ 46.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில் முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்.
மாரடைப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு கொரோனா பாதிப்பு காரணமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா, எம்பி., ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் ராஜகுமார், நிவேதா எம் முருகன், பன்னீர்செல்வம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.