மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-5' பெலாரசின் அரினா சபலென்கா, 25வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை ரிபாகினா 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட சபலென்கா, இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய சபலென்கா 6-4 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அசலென்கா 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றார். தவிர இது, இவரது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை (2019ல் யு.எஸ்., ஓபன், 2021ல் ஆஸி., ஓபன்) கோப்பை வென்றிருந்தார்.