கூடலூர்:கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தனியார் எஸ்டேட் காவலர் உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி சீபுரம் பகுதியை சேர்ந்தவர் நௌசாத் அலி, 38. இவர், அம்பிலிமலை பகுதியில் உள்ள, தனியார் எஸ்டேட்டில் இரவு காவலராக பணியாற்றி வந்தார். இவர், ஜமால் என்பவருடன் இன்று (ஜன.,28), மாலை அங்குள்ள காபி தோட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, திடீரென அப்பகுதிக்கு வந்த காட்டு யானையை பார்த்து, உயிர் தப்பிக்க இருவரும் ஓடினர்.ஆனாலும், யானை தொடர்ந்து துரத்தி சென்று நௌசாத் அலியை தாக்கி கொன்றது. ஜமால், உயிர் தப்பினார். சத்தம் கேட்டு, சென்ற அப்பகுதியினர் யானையை விரட்டினர். காயத்துடன் உயிர் தப்பிய ஜாமலை மீட்டு, சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், இறந்த நௌசாத் அலியின் உடலை, சீபுரம் பகுதிக்கு எடுத்து, 'காட்டு யானையை பிடிக்கவும்; இறந்த குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.