பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி.,சண்முகசுந்தரம் பேட்டி: தமிழகரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு, முறையாக நிதி ஒதுக்கப்படுவதுகிடையாது. வெளிநாட்டு முதலீடுகளில், தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்குவது இல்லை. தமிழகம் மருத்துவத் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்தாலும், இங்கு மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்குவதில்லை.
தி.மு.க., - எம்.பி.,யின் குற்றச்சாட்டு நிஜமா, இல்லையா என்பது குறித்து, புள்ளி விபரங்களுடன் பா.ஜ.,வினர் தான் பதிலடி தரணும்!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்அறிக்கை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மஹா சிவராத்திரி விழாவை, ஐந்து பெரு நகரங்களில் பிரமாண்டமாக கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளும், கோவில் நிதி வீணடிக்கப்படுவதும் வேதனைக்குரியது. கோவில் நிதியை பயன்படுத்தாமல், அனாவசிய செலவுகளின்றி, நன்கொடையாளர்கள் வாயிலாக சிவராத்திரி விழாவை நடத்த வேண்டும்.
நியாயமான கோரிக்கை... துறையின் அமைச்சர் சேகர்பாபு பரிசீலித்தால் நன்றாக இருக்கும்!
த.மா.கா., மாநில பொதுச் செயலர் ராஜம் எம்.பி.நாதன் அறிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுய உதவிக் குழுக்களை ஆளுங்கட்சியினர் விலை பேசுகின்றனர். வீடு வீடாகச் சென்று சிக்கன், மட்டன், பால், அரிசி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கின்றனர்.
வீதிக்கு ஒரு அமைச்சர், குடும்பத்திற்கு ஒரு நிர்வாகி என, பழைய திருமங்கலம் 'பார்முலா'வும், நேற்றைய ஆர்.கே.நகர் பார்முலாவும்தோற்கும் வகையில், புதிய புதிய உத்திகளுடன் ஆளுங்கட்சி களமிறங்கியுள்ளது. இப்படி ஓட்டு வாங்கி வெற்றி பெறும் நிலை மாறி, உண்மையான ஜனநாயகம் மலர்வது எப்போது?
இந்தச் செயல்களில் ஒன்றை கூட, இவரது கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., தரப்பு செய்யாது என, இவரால் உத்தரவாதம் தர முடியுமா?