வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, 10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இன்று காலை, 6:45 முதல் 7:30 மணிக்குள், மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிக்கம்பத்தில், மகர லக்னத்தில், சேவல் உருவம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஏற்றப்பட உள்ளது.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்.,4ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், அதனைத்தொடர்ந்து, தேர் வடம் பிடித்தலும் வெகு விமர்சையாக நடக்க உள்ளது.