கோவை:காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒண்டிப்புதுார் அருகே, கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், மகாசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னையின், 42ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது.
விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை மற்றும் கோமாதா பூஜையுடன், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் விழாவை துவக்கிவைத்தார்.
அங்காள பரமேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அன்னையின் திருக்கல்யாண உற்சவத்தில், அன்னைக்கு திருமாங்கல்யம் சாட்டப்பட்டது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு, குண்டத்துக்கு பூ இடுதல், கரும்பு சமர்ப்பித்தல், குண்டத்துக்கு அக்னி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முன்னதாக, தீமிதி உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு, அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி பரவசமடைந்தனர். தொடர்ந்து, நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர்.