அவிநாசி:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அத்திக்கடவு திட்டம் தொடர்பான பிரசாரம் வலுப்பெறும் என்பதால், அத்திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டத்தை உள்ளடக்கி, அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
இருப்பினும், 'வரும், ஏப்., மாதம், திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும்' என, நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ல் நடக்கிறது.
அறுபது ஆண்டு கனவு திட்டமான, அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில், அதுவும், பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான், நிதி ஒதுக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது.
எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம், தேர்தல் பிரசாரத்தின் போது, துருப்புச் சீட்டாக இருக்கப் போகிறது.
'அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும், திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம்' என, தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள, விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதிகளையும் அவர்கள் அளிக்கக்கூடும்.
அத்திக்கடவு -- அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், 'ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக, பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.
இருப்பினும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால், திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்' என்றனர்.
Advertisement