வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'தி.மு.க., பிரமுகர்நடத்திய மாந்திரீக பூஜை பத்தி தெரியுமா வே...'' எனக்கேட்டு, சில வினாடிகள் அமைதி காத்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் ஆளுங்கட்சியில ரெண்டு முக்கியபுள்ளிகளுக்கு மத்தியில,'ஈகோ' மோதல் நடக்குது... நகருக்கு, 'தந்தை'யானவர், கட்சியில வேகமா வளர்ந்துட்டு வர்றது, எதிர்காலத்துல தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு மாவட்ட புள்ளி நினைக்காரு வே...
![]()
|
''அவரது வளர்ச்சியை தடுக்கிறதுக்காக, போன வாரம், கேரளாவுல இருந்து மாந்திரீகர்களை கூட்டிட்டு வந்து, பல்லடம் ரோட்டுல இருக்கிற, சிவளாபுரி அம்மன் கோவில்ல, மூணு மணி நேரம் ரகசிய பூஜை, ஹோமம் நடத்தியிருக்காரு...
''இதை, உளவுப்பிரிவு போலீசார் மோப்பம் பிடிச்சு, கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பிட்டாவ... மேலிடத்துல இருந்து விசாரிச்சப்ப, தன் மகளுக்கு திருமண தடை நீங்க, பரிகார பூஜை செஞ்சதா மாவட்ட புள்ளி மழுப்பிட்டாரு வே...
''ஆனா, 'ஹோமம் நடந்த இடத்துல, 'நகர தந்தை'யின் படம் எதுக்கு இருந்துச்சு... பரிகார பூஜையில குடும்பத்தினர் ஏன் கலந்துக்கலை'ன்னு, திருப்பூர் தி.மு.க.,வினர் முணுமுணுத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
''செல்வராஜ் வீட்டு விசேஷத்துக்கு தினேஷ் வந்தாரா பா...'' என, எதிரில் வந்த நண்பரிடம் அன்வர்பாய் பேச, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.
''சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டாருங்க...'' என, சிரித்தபடியே வந்தார், அந்தோணிசாமி.
''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''வேலுார் மாநகராட்சி, 24வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சுதாகர்... சத்துவாச்சாரியைச் சேர்ந்த இவர், மூலக்கொல்லை பகுதியில அதிக அளவுல மண் திருட்டு நடக்கிறதாகவும், அதை தடுத்து நிறுத்தும்படியும், கலெக்டர் ஆபீஸ்ல புகார் குடுத்தாருங்க...
''கலெக்டர் உத்தரவுப்படி, வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினாங்க... இதுல, புகார் தந்த கவுன்சிலர் சுதாகரே, அனுமதியில்லாம, சட்டத்துக்கு புறம்பா மண் எடுத்து, செங்கல் சூளை நடத்திட்டு வர்றது தெரிஞ்சதுங்க...
''உடனே, வருவாய்த் துறையினர் புகார்படி, சுதாகர் மேலயே போலீசார் வழக்குப் பதிவு பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அமெரிக்கா போக, 'சான்ஸ்' கிடைச்சிருக்கு ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார் குப்பண்ணா.
''யாருக்கு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சர்வதேச அளவுல, 5,000 இளம் அரசியல்வாதிகளுக்கு தலைமை பண்பை வளர்த்துக்கறஅரசியல் பயிற்சி மாநாட்டை, வருஷா வருஷம் அமெரிக்க அரசு நடத்தறது... 82 வருஷமா இந்த மாநாடு நடக்கறது ஓய்...
''இதுல, நம்ம ஊர் தலைவர்கள் இந்திரா, வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், பிரதமர் மோடி இளைஞர்களா இருந்தப்ப கலந்துண்டு இருக்கா... இந்த வருஷத்துக்கான பயிற்சி, இந்த மாசக் கடைசியில துவங்கி, மூணு வாரம் அமெரிக்காவுல நடக்கறது ஓய்...
''அரசியல், தொழில், பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தறது எப்படின்னு இளம் தலைவர்களுக்கு பயற்சி குடுக்கறா... இதுக்கு, தமிழகத்துல இருந்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின் கோவை மண்டல செயலர் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ., மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா, தி.மு.க., அமைச்சர் தியாகராஜன் அலுவலகத்தை சேர்ந்த வருண், கர்நாடகபா.ஜ.,வை சேர்ந்த சம்பத் ராமானுஜம் ஆகியோருக்கு, அமெரிக்க அரசு அழைப்பு விடுத்திருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''ஓசியில மளிகை பொருள் வாங்குறது மட்டுமில்லாம, கமிஷன் வேற கேட்காவ வே...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அண்ணாச்சி.
''யாருன்னு விபரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆபீஸ், சென்னை கீழ்ப்பாக்கத்துல இருக்கு... தமிழகம் முழுக்க இருக்கிற கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் எல்லாத்தையும், இங்க இருக்கிற உயர் அதிகாரிகள் தான் கட்டுப்படுத்துதாவ வே...
''சர்வ அதிகாரமும் படைச்ச இந்த உயரதிகாரிகள், அவங்க வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை, கூட்டுறவுத் துறையின் பல்பொருள் அங்காடியில தான் வாங்குதாவ... ஆனா, பணம் தர மாட்டாவ வே...
''இது போதாதுன்னு, பல்பொருள் அங்காடிக்கு மளிகை பொருட்கள், 'சப்ளை' செய்ற கம்பெனிகள் இருக்குல்லா... அவங்ககிட்டயும் கமிஷன் வாங்கி தரச் சொல்லி, கீழ்மட்ட அதிகாரிகளை நெருக்குதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆவின்ல பால் கொள்முதல் ஏன் குறையறது தெரியுமா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''நீரே விபரமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''அ.தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 41 லட்சம் லிட்டர் பாலை தினமும் ஆவின் கொள்முதல் செஞ்சுண்டு இருந்துது... இதனால, அப்ப ஆவின் லாபகரமா இயங்கியதா சொல்றா ஓய்...
![]()
|
''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பால் கொள்முதல் படிப்படியா குறைஞ்சு, இப்ப, 30 லட்சம் லிட்டர் அளவுக்கு போயிட்டதால, ஆவின் நஷ்டத்துல போறது...
''அது மட்டுமில்லாம,ஆவின் கொள்முதல் செய்யற பாலின் பெரும் பகுதியை, ஆளுங்கட்சி மேலிடத்துக்கு நெருக்கமான தனியார் பால் கம்பெனிக்கு அதிகாரிகள் மடைமாற்றி விடறதாகவும் சொல்றா...
''இந்த எல்லா மேட்டரும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு நன்னா தெரிஞ்சும், 'கப்சிப்'னு வாய மூடிண்டு இருக்கறது தான், மர்மமா இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கவுன்சிலரே சரக்கு வித்தா வெளங்குமா பா...'' எனக் கேட்டபடியே, கடைசி தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''அரசே விற்குதே... அதான் கவுன்சிலர், 'ஹெல்ப்' பண்றாரு போல... எந்த ஊருலன்னு சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பக்கத்துல, வேலம்பட்டின்னு ஒரு ஊர் இருக்குது... இங்க அரசு துவக்கப்பள்ளி பக்கத்துல, 'டாஸ்மாக்' கடை இருக்குது பா...
''இந்தக் கடைக்கு எதிர்ல இருக்கிற பார்ல, 24 மணி நேரமும் சரக்கு விற்பனை களைகட்டுது... நாகோஜனஹள்ளி பேரூராட்சியின், தி.மு.க., பெண் கவுன்சிலர் தான், அனுமதி இல்லாம இந்த பாரை நடத்துறாங்க பா...
''அதுவும் இல்லாம, சுற்றுவட்டார பகுதியில, 'பிளாக்'ல சரக்கு விற்கிறவங்களிடம் மாசம், 5,000 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை அடாவடி வசூலும் நடத்துறாங்க...
''அதேபோல, போச்சம்பள்ளி, மத்துார் போலீஸ் எல்லையில இருக்கிற கொடமாண்டப்பட்டியில, தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர், கள்ளச்சந்தை மது விற்பனையில பட்டைய கிளப்புறாரு... எல்லா விபரமும் போலீசுக்கு தெரிஞ்சும், ரெண்டு பேரும் ஆளுங்கட்சியா இருக்கிறதால, நடவடிக்கை எடுக்க தயங்குறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement