கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் சீபுரம் பகுதியை சேர்ந்த நௌசாத்அலி, 38, ஜமால் ஆகியோர், நேற்று, மாலை அம்பிலிமலை பகுதியில் உள்ள, தனியார் காபி எஸ்டேட் பகுதியில், காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அப்பகுதிக்கு வந்த காட்டு யானையிடமிருந்து உயிர் தப்பிக்க, இருவரும் ஓடினர். ஆனாலும், யானை துரத்தி சென்று, நௌசாதை பிடித்து, தாக்கி கொன்றது; ஜமால், உயிர் தப்பினார். அப்பகுதியினர், யானையை விரட்டி, ஓடி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிய ஜாமலை மீட்டு, சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, இறந்த நௌசாத் உடலை, சீபுரம் பகுதிக்கு எடுத்து வந்து, 'காட்டு யானை பிடிக்கவும்; இறந்தவர் பிள்ளைக்கு அரசு வேலைக்கான, அரசு உத்தரவு கிடைக்கும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்' என, கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்; போராட்டம் தொடர்கிறது. 'தங்கள் கோரிக்கைகள் , நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என, மக்கள் தெரிவித்தனர்.