வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் விழா பார்லிமென்ட் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் இன்று(ஜன.,29) நடைபெற்றது.

குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள விஜய் சவுக் என்ற பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. அந்த வகையில், இன்று(ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மழை கொட்டியது.

ஆனால் கொட்டும் மழையில், முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் முகப்பில் நடைபெற உள்ள படைவீடு திரும்புதல் விழாவின்போது முதல்முறையாக, முப்பரிமாண ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் நான்கு நாள்கள் நீடிக்கும் குடியரசு தின விழாவின் நிறைவைக் குறிப்பிடும் வகையில், படைகள் பாசறைக்குத் திரும்புதல் விழாவானது தேசத்தின் பெருமிதமாக கருதப்படுகிறது.
