வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்று தான் சிலை வைக்க முடியும் எனக்கூறி, தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று முன்தினம் சிலையை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக, தாசில்தார் கண்ணன், வன திட்ட அலுவலராக மாற்றப்பட்டார். டி.எஸ்.பி., கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
![]()
|
கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், ''சிலையை அகற்றியதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக தாசில்தார் மாற்றப்பட்டுள்ளார். அரசிடம் அனுமதி பெறாமல் சிலை அமைத்தது தவறு தான்.
''அதே நேரம் அவர்கள் தற்போதைக்கு சிலையை மூடிக் கொள்கிறோம். அனுமதிக்கு பின் திறந்து கொள்வதாக கேட்டுள்ளனர். இதில், சமரசம் அடையாத தாசில்தாரால் இச்சூழல் வந்துவிட்டது,'' என்றார்.
எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில், ''டி.எஸ்.பி., கணேஷ்குமாரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது,'' என்றார்.