வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரியில் நேற்று வறண்ட வானிலை நிலவியது. நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய, 24 மணி நேரத்தில், மாநிலத்தின் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.
வலுப்பெறும்
இந்திய பெருங்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, புயலுக்கு முந்தைய நிலையான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலமானது, நாளை மறுதினம் இலங்கை கடற்பகுதியை சென்றடையும்.
இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
வரும், 2ம் தேதி தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், மிதமான மழை பெய்யும். துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
எச்சரிக்கை
இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடலில், இன்று முதல் 2ம் தேதி வரை, அந்தமான் கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
தெற்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில், நாளை முதல் 2ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.