டெபிட் கார்டு இன்றி ஆதார் ஓ.டி.பி மூலம் யு.பி.ஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் முன்னதாக யு.பி.ஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன், அதற்குரிய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி எண்ணும் தேவை. இது டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வங்கி வாடிக்கையாளருக்கு யு.பி.ஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து, தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், ”உங்களுக்கு தெரியுமா? யு.பி.ஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. யு.பி.ஐ அலையில் இணைய, ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதுமானது” என தெரிவித்துள்ளது.
ஆதார் ஓ.டி.பி மூலம் யுபிஐ ரகசிய எண் அமைக்க/ மாற்றியமைப்பதற்கு சிறந்த மற்றும் எளிதான வழியாகும். மேலும் டெபிட் கார்டு இல்லாத மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பயன்பெற விரும்பும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யுமென தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
![]()
|
யு.பி.ஐ செயலியில் ரகசிய எண்ணை மாற்றுவது எப்படி?
1.யுபிஐ செயலியில் புதிய ரகசிய எண் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
2.ஆதார் அடிப்படையிலான சரிப்பார்ப்பை தேர்வு செய்ய வேண்டும்
3. ஆதார் அட்டையின் கடைசி 6 எண்களை பதிவு செய்ய வேண்டும்.
4. மொபைல் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி எண்ணை பதிவிடுங்கள்.
5. சரிபார்த்த பின், புதிய ரகசிய எண்ணை பதிவிட்டு, உறுதி செய்யுங்கள்.
இதற்கு மொபைல் எண், ஆதார் எண்ணுடன், வங்கி கணக்கு இணைத்திருப்பது அவசியம். வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும்.