வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு 'கோவிலை இடித்தேன்' எனக் கூறிய வீடியோவை பரப்பிய விவகாரத்தில், அந்த வீடியோ முழுமையானது எனவும், எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு சமீபத்தில், 'நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடித்தேன்' என பேசும் சுமார் 40 வினாடி கொண்ட வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக திமுக.,வினர் டி.ஆர்.பாலு பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டனர். மேலும், முழு வீடியோவையும் வெளியிடாமல் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டதாக அண்ணாமலையை விமர்சித்திருந்தனர்.
திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் இது குறித்து கூறுகையில், 'அண்ணாமலை, வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார். திமுக.,வினர் பேசுவதை வெட்டி ஒட்டி பா.ஜ.,வை வளர்க்கலாம் என அண்ணாமலை முயற்சிக்கிறார்' என விமர்சித்து பேசினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அண்ணமாலை கூறியதாவது:
சவால்

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தில் உண்மையில்லை; எனவே அது பற்றி கவலையில்லை. பார்லிமென்ட் தேர்தல்தான் எங்கள் இலக்கு, இடைத்தேர்தல் அல்ல; இது பா.ஜ.,வின் பலத்தை நிரூபிக்கும் தேர்தல் அல்ல. நான் வெளியிட்ட வீடியோவை வெட்டி ஒட்டவில்லை.
நான் வெளியிட்ட வீடியோ முழுமையானது. எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலகவும் தயார். டி.ஆர்.பாலு வீடியோ நாளை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.