மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சா நகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சத்தியசீலன். இவர் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீராம் பெஸ்ட் பென்சிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் விஏஓ. மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் இடத்தில் உரிமையாளர் மோகன்தாசிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.