ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதை எதிர்த்து, அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பு போட்டியிட முன்வந்துள்ளது; பன்னீர்செல்வம் தரப்பினர், பா.ஜ., முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளரை அறிவிக்க, பா.ஜ., முன்வருமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆலோசிக்க, சென்னையில் இன்று பா.ஜ., மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள்கூட்டம் நடக்கிறது. இதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை, அக்கட்சி எடுக்க உள்ளது.
டில்லியில் இருந்து நாளை, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் தருண் சுக், சென்னை வருகிறார். நிர்வாகிகளை சந்தித்து பேசி வேட்பாளர் அறிவிப்பையும் அவர் வெளியிட உள்ளார்.
வரும் 3ம் தேதி வரை சென்னையில் தங்கியிருக்கும் தருண், தேர்தல் பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.