வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மின் இணைப்பு உடன் 'ஆதார்' இணைக்க பிப்.,15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணியை, 2022 நவ., 15ல் துவக்கியது; டிச., 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
பின், இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, ஆதார் இணைக்குமாறு கூறி வருகின்றனர். ஆதார் இணைக்க வழங்கப்பட்ட அவகாசம், இன்றுடன்(ஜன.,31) முடிவடைகிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஷி அளித்த பேட்டி:
விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. குடிசைகளுக்கான மின் இணைப்புகளிலும் பலர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
நீட்டிப்பு:
மின் இணைப்பு உடன் 'ஆதார்' இணைக்க பிப்.,15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9% பேர் மட்டுமே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. ஒரு மின் இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடைசி அவகாசம்:
76 நாட்களில் 2.42 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். இதுவரை 90.69% இணை த்துள்ளனர். ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி அவகாசம் இதுதான். இதனை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் தந்த நிலையில் ஆதாரை இணைக்க மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.